Saturday, April 11, 2026

கட்சி ஜுரம்

திரு பட்டுக்கோட்டை பிரபாகரன் அவர்கள், ககிப்புத் தன்மை குறித்து தன்  கவலையைத் தெரிவித்திருந்தார். 

அலுவலகத்தி்ல், கட்சி நிலைபாடுகள், தனி நபர்களின்  நட்புகளைப் பாதிப்பது சகஜமாகிப் போயிருந்தது.

ஓய்வு பெற்ற பின்னரும் கூட அரசியலிலோ, நட்பிலோ, குடும்பத்திலோ மாற்றுக் கருத்து என்று எதையுமே வெளிப்படுத்த இயலாத ஒரு சகிப்புத்தன்மை குறைந்த மனநிலை நிலவுகிறது.

ஒரு பொருளுக்கே பல நூறு  கோணங்கள் சாத்தியப்படும் பொழுது, ஒரு கட்சியின்  கருத்துக்கு,  பல மாற்றுக் கருத்துக்கள் இருக்கத்தானே செய்யும்? 

ஒருவரின் ஒரு கருத்துக்கு மாற்றுக் கருத்தை அவரிடம் வெளிப்படுத்தும்போது, அந்த நபரின் மீதான எதிர் வினையாகவோ, விமரிசனமாகவோ எடுத்துக் கொள்வது நியாயமற்றது. 

குறிப்பிட்ட ஒரு கருத்தோடு மட்டுமே முரண்படுகிறேன் என்கிற நிலைப்பாட்டை புரியவைக்க முடியாமல் போகிறது; அல்லது மாற்றுக் கருத்து புரிந்தாலும் அதை ஏற்பது கெளரவ இழுக்கு போல  எடுத்துக் கொள்ளப்படுகிறது.

விளைவு, ஒரு நல்ல உறவில் கூட விரிசல் ஏற்பட்டு பலவீனமடைகிறது.

இனி, மாற்றுக் கருத்து தோன்றினாலும் அதை வெளிப்படுத்தாமல் தலையாட்டி பொம்மை போல ஆட்டிவிடுவதுதான் எந்தக் காயமும் படாமல் உறவைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியோ என்றும் தோன்றுகிறது.

நம் நிஜமான உணர்வை வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் அமைதி காத்து,  அப்படி ஏன் அந்த உறவைக் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது என்ற கேள்வியைத் தவிர்க்க இயலவில்லை. 

கட்சி அரசியல் இவ்வளவு வன்மம், குரோதம், வெறுப்பு, ஆவேசம் ஆகியவற்றை வளர்க்க இயலுகிறது  என்பது விநோதம்.

மாற்றுக் கருத்தை விவாதிக்க வேண்டாம்; குறைந்த பட்சம் வெளிப்படுத்தவாவது  செய்யலாமா என்றால், அதுவும் சாத்தியமில்லாத காலம் இது.

நமக்கு நாமே பேசிக் கொள்ளலாம்; சப்தமில்லாமல்.   

இல்லாவிடில், எங்கேயாவது நமது கருத்தை எழுதி, for me only என போட்டு வைக்கலாம்.

முக நூலில் ஏதாவது முரணான கருத்தை எழுதிவிட்டால், எங்கிருந்து அவ்வளவு ஆக்ரோஷம் வருமோ தெரியாது! பிய்த்து பிராண்டி வைப்பார்கள். 

இத்தனை வருட பழக்கம் என்பது சட்டென மாறி வன்மமே மேலிடும்.

முக நூல் நட்பு என்பதே  கட்சி சார்பாக மாறிப் போனது. 

பிரபலங்கள் கூட கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்ய வைத்ததுதான்,  சகிப்புத் தன்மையின் வெளிப்பாடு. 

விதிவிலக்காக கொஞ்சம் இருக்கக் கூடும்.

Deep politics காரர்கள், இப்படி ஒரு பிளவைத்தான் விதைக்க எண்ண இருப்பார்கள்.  

கட்சி பேதம், மத, இன பேதம்  எங்கும்  நீக்கமற ஏற்பட்டு விட்டது.  

அழைப்பிதழ்கள் கூட, எதிர் காலத்தில் இப்படி மாறி விடுமோ என்னவோ? 

மக்களை சந்தே கண்ணோடு பார்க்க வைத்தது, சற்று அச்சத்துடனேயே வாழ வைத்தது,   ஒத்த கருத்துடையவர்களோடு மட்டும் பாது காப்பாக உணர வைப்பது நடைமுறையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.