Tuesday, June 28, 2016

உயர்ந்த கரங்கள்…

வழமையாக, முதல் நாள் நடக்கும் திருமண வரவேற்பிற்குச் செல்ல இயலாததால், அடுத்த நாள் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்.  மிகவும் தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களைத்தவிர மீதியுள்ள அனைவரும் வரவேற்பிற்கு மட்டும் செல்வது நடைமுறையாகிவிட்டதே!   

தாலிகட்டும் நேரம் நெருங்கியது. அனைவரின் கையிலும் பூவிதழ்களும் அட்சதைகளும் வழங்கப்பட்டன. அனைவரது வாழ்த்தும் மணமக்களுக்குக் கிட்டட்டும்  என்பதற் காகத்தானே, இவை அனைவரது கையிலும் தரப்பட்டன? 

ஆசீர்வதிக்கத் தயாராகும் பொழுது, திடீரென, எங்கிருந்து முளைத்தார்களோ தெரியவில்லை, பத்து பதினைந்து  நபர்கள்,  தங்கள் கையில் மொபைல் ஃபோண்களை நீட்டிக்கொண்டு, மணமக்களை மொத்தமாகச்  சூழ்ந்து கொண்டனர்; அவையில் இருக்கும் அனைவருக்கும் தங்களது ப்ருஷ்ட பாகங்களைக் காட்டிக் கொண்டு!  தாலி கட்டும்  நிகழ்ச்சியைப் பதிவு செய்து கொள்கிறார்களாம்.  நல்லது! ஆனால், மலர்களையும் அட்சதையையும் யார்மேல், எதன் மேல்  தூவ?  அழிச்சாட்டியம்!

கூடியிருந்தவர்கள் பலரும் இதனைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை இல்லை. ஒரு தோராயமாக, அட்சதைகளை,  மணமக்கள் மேடை நோக்கி, தங்கள் புஜ சக்திக்கு ஏற்றவாறு வீசி யெறிந்துவிட்டு,  நடையைக் கட்டினர்.  முன்வரிசையில் இருந்தோர் அனைவரும் தங்கள் தலையில் விழுந்த அரிசிகளை தட்டிவிட்டுக்கொண்டனர்.

ஸ்மார்ட் ஃபோன் வந்தாலும் வந்தது,  அனைவரும் புகைப்பட நிபுணராகிவிட்டனர். Auto மோடில் போட்டால் அனைத்தை யும் ஸ்மார்ட் ஃபோணே பார்த்துக் கொள்ளும்.  நிபுனத்துவம் ஏதும் பெற்றிருக்க வேண்டியதில்லை.  முன்பெல்லாம் ஒரிரு ஃபோட்டோகிராபர்கள்தான், மணமக்களை மறைத்துக் கொள்வர். அதற்கே காண்டு வரும். இப்பொழுது சிறியவர் முதல் பெரியவர் வரை, அவரவர் வசதிக்கேற்ப ஒரு ஸ்மார்ட்ஃபோன் என்கிற ஆயுதத்தோடு,  ஒரு படையே திரண்டு, மேடையை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.  

இந்த வாரம் ‘The Hindu’  நாளிதழ்  (24/06/2016) ஒரு கட்டுரையை வெளியிட்டி ருக்கிறது. கட்டுரையாளர் (எஸ். புரபு) மிகவும் நொந்து போய்விட்டார் போலிருக்கிறது. மனிதர் சென்னையில் பிரம்மோத்சவம் ஒன்றிற்கு, சாரி..சாரி, செல்ஃபோன் உற்சவத்திற்குச் சென்றிருக்கிறார். அதே கடுப்பில் கட்டுரை எழுதிவிட்டார். அதன் சுருக்கம் கீழே:
---

கோயில், பக்திப் பிரவாகமிட்டிருந்தது.  மிக நீண்ட வரிசைகள்.  தாள இயலாத கூட்டம்.  “சிறப்பு தரிசன” வரிசைகளும்,  நெரிசலில் பிதுங்கிக் கொண்டிருந்தன.  கவலை, தேவை, பிரார்த்தனை, நன்றி தெரிவிக்க அல்லது சும்மா தரிசிக்க என பல்வேறு நோக்கங்களை உத்தேசித்து கோயில்களில் கூட்டம்  நிரம்பி வழிகிறது. அதுசரி... ஏன் கோயிலுக்கு வரவேண்டும்?  இறைவனுக்கு முன்னால், ‘தன்னை’ இழந்து, அவனது அருளில் கரையவேண்டும்  என்பதற்குத்தானே?  கண் இமைக்காது, அபிஷேக ஆராதனைகளை காண விருப்பம் கொண்டிருக்க வேண்டும். அவனை இரு கரம் கூப்பி வணங்கவேண்டும். அதற்காகத்தானே?  

ஆனால், தற்போதும் கரங்கள் கூப்பப்படுகின்றன. உயருகின்றன! வணங்குவதற்கல்ல!  கூப்பிய கரங்களுக்குள் கைபேசிகள் தான் இருக்கின்றன.  ஆமாம். பக்தி, எலக்ட்ரானிக் கருவிகளால் ஹைஜாக் செய்யப்பட்டுவிட்டது. இறைவனை தனது கேமிராவிற்குள் கொண்டுவர, படுபிரயத்தனம் நடைபெறுகிறது.

கோயில் சுவர்களில், புகைப்படம் எடுக்கத் தடைசெய்யப்ப ட்டுள்ளது என்ற அறிவிப்புகளை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.  பக்தர்களின் கவனம் முழுவதும் முக்கியமான தருணத்தை மொபைல்களில் பதிவு செய்துகொள்வதில் இருக்கிறதே தவிர, தரிசிப்பதில் இல்லை.

சமயக் குரவர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனின் வீதி உலாக்களும்,உற்சவங்களும், ஆராத னைகளும், பக்தர்களின் மீது எவ்விதம் நேர்மறையான சக்தியைச் செலுத்தும், என எழுதி வைத்துள்ளனர்.  திருவாரூர் தியாகராஜர், சென்னை கபாலீஸ்வரர் மற்றும் ஆரூத்ரா தரிசனங்கள் யாவும் வீதியில் கூடியிருந்த மக்களின் கண்களில், எப்படி கண்ணீரை வழிந்தோடவைத்தன, அவர்கள் உற்சவம் முடிந்து வீடு திரும்பும் பொழுது, எவ்வளவு இனிய கணங்களைச் சுமந்து சென்றனர் என கரைந்துருகி  பாடிவைத்துள்ளனர். 

முக்கியத் தருணங்களில் எல்லாம், பக்தர்களின் கரங்கள் பரபரப்பாக செயல் படுகின்றன. வணங்குவதற்கல்ல; புகைப்படமெடுக்க. நீ  நன்றாக எடுத்தாயா, நான் நன்றாக எடுத்தேனா என்று போட்டி வேறு.  சரணாகதி என்பது இறைவனிடம் நடக்கவில்லை; செல் ஃபோண்களிடம்தான்.

‘பிரார்த்தனைகள் யாவும் அமைதியுடன் கட்டுப்பாட்டுடன்’ என்பது காலாவதியான சங்கதி போலும்.


வீட்டிற்கு வந்தாலும், நன்றாக தரிசனம் கிட்டிற்றா என்ற விசாரிப்பைவிட, ‘எங்கே எடுத்த ஃபோட்டோக்கள்? ... காண்பி’ என வினவப்படுவதே அதிகம்.  கோயில் பிரகாரங்களில் வலம் வரும்பொழுதுகூட, செல் ஃபோண்களில் ‘செய்திகளை டைப் கொண்டு’ தானே செல்கிறார்கள்?

வழிபாட்டுத் தலங்கள் வழிபாட்டுக்கு மட்டும்தான் என எப்பொழுது மக்கள் ‘தாங்களாகவே’ உணர்வார்கள்?
                                                            ---


அது சரி..... காலம் மாறிப் போச்சு, செல்ஃபி மோகத்தில் உயிரையே விட்ட பலர் இருக்கும் பொழுது, ஆஃப்டரால், தரிசனமா முக்கியம் என்கிறீர்களா?







Friday, June 24, 2016

.ஆல்....

வாழ்க்கைப் பாதையில், ஒவ்வொரு கட்டத்திலும்,  ‘..ஆல்ஒரு 
மௌனமான திருப்பு முனை. இன்னும் கொஞ்சம் 
படித்திருந்தால்,இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால், வேறு 
மாதிரி முடிவெடுத்திருந்தால், இந்த புத்தி அப்போதே 
இருந்திருந்தால், அட.. அல்பமா  டிரைவிங்கில் 
சற்று  அவசரப்படாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு 
'ஆலும் ..' ஒரு  மௌணவெடியல்லவா? பெர்முடேஷன்-
காம்பினேஷன் போல, முடிவில்லா சாத்தியங்களுடன்
ஒவ்வொரு ‘..லும்..’,  வாழ்க்கை திசைமாறிப் 
போகவைக்கும் வலு  கொண்டது.

ப்ரோக்ராம்களில் வேண்டுமானால் if... else போட்டு எப்படி 
விரும்புகிறோமோ அப்படி முடிவெழுதிக் கொள்ளலாம். 
நிஜத்தில் if க்குள் இருப்பதா else க்குள்  செல்வதா
என்பது ஒவ்வொரு கட்டத்திலும் திணறும் குழப்பம். அடுத்த 
else க்குள்  என்ன இருக்கிறது என்பது மர்மவெடி.  மகிழ்ச்சிக் 
கொத்தாய்ப்  பூப்போமா  அல்லது வெடித்துச் சிதறுவோமா
லூப்பின் முடிவு யார் கையில்இறைவனிடத்தா?  தெரிய 
வில்லை. எனினும், தத்துவங்கள், அனுபவ மொழிகள்
பட்டறிவு,  கல்வியறிவு, சான்றோர்கள்   வழிகாட்டுதல் 
கொண்டு , எந்த சமயத்தில் எப்படித் தீர்மாணிப்பது என 
ஓரளவே யூகித்துச் செல்லலாம்.

தத்துவங்கள் ரெடிமேட் சட்டையா, அப்படியே 
அணிந்து பயணிக்க? அவை கானகத்தில்காரிருளில் 
கையிலிருக்கும் ஒளிவிளக்கு போல. ஒளிகொண்டு வழியை
நாம்தான் தேடிக்கொள்ள வேண்டும்.  கிணற்றில் விழுவதும் 
கிழக்கில் வெளியேறுவதும் நம் கையில்.


-- ஆல் .....

உன்னைச் சுற்றியோரது விரல்கள் யாவும்,
விளைந்தனவற்றிற்கு நீயே பொறுப்பென சாட்டும் பொழுது,
உலகு உனைச் சந்தேகிக்கும் பொழுது,
உன்மேல் நீ நம்பிக்கை கொண்டு தலைஉயர்ந்து 
நிற்பாயேயானால்...

காத்திருந்து காத்திருந்து உடலும் மனமும் சோராதிருந்தால்..
பொய்யுரைகள் யாவும் உன்னிடம் பொய்த்துப் போனால்,
வெறுப்புரைகள் யாவும் உன்னை வீழச் 
செய்யாதிருக்குமானால்,
உன் கனவுகளுக்கு நீயே பொறுப்பேற்றால்,

உச்சமும் நீச்சமும் எளிதாக உன்னைக் கடந்துபோனால்,
முட்டாள்களின் - சுய நலமிகளின் வலையில்  தப்பித்தால்,
உன்மைகள் உன்னை வைதாலோ வாழ்த்தினாலோ
நீ உடைந்து போகாமலிருப்பாயேயானால்,

மீந்த சக்திகளைத் திரட்டி மீண்டுடெழுவாயானால்,
உச்சத்தில் தலை கனமாகாமலும்நீச்சத்தில் தலை 
கவிழாமலும் இருக்க முடியுமானால்மாந்தரிடமும் 
மந்திரியிடமும் நிலையிழக்காமல் பழக முடியுமானால்,

உற்றமும் துரோகமும் உனைக் காயப்படுத்த 
அனுமதிக்காமலிருப்பாயேயானால்,
கற்றவர்களை நாடி கலந்துரையாட முடியுமானால்,
எவரும் உன்னைத் தூசியென வீசியெறிய முடியா 
நிலையில் இருப்பாயானால்
எதையும் எப்போதும் மன்னிக்கும் மனம் 
பெற்றிருப்பாயானால்,

நீயே மனிதன்..
உலகு உனக்கே!
---

எனக்கும் ஒரு ஆல்பற்றிய ஒரு மயக்கம் இருக்கிறது. அது 
என் துணைவிபற்றியது. அவர்  மறையாமல் இருந்திருந்தால்.  
26/06/16 - ஞாயிறு அன்று   மறைந்தஎன் மனைவியின்
பிறந்த நாள். 

அவர் இருந்திருந்தால் அன்றுடன் அவருக்கு அறுபது வயது  
நிறைவு.   அவர் இம்மாதம்  பணியிலிருந்து ஓய்வு 
பெற்றிருப்பார்.

பணி  ஓய்வுகுறித்தும், ‘பணிஓய்விற்குப் பின்...’ எனவும் என 
அவர் வைத்திருந்த  நிரல்கள் ஏராளம்.  ஆனால் இறைவன் 
அவருக்கு நிரலில் இறுதியை  சீக்கிரமே கொடுத்து விட்டான். 

அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்! எனது 
ஆரோக்கியத்தின் இலட்சனத்திற்குநான் வெகுசீக்கிரமே 
போய்விடுவேன். உனை வெறுப்போர் உலகில் இல்லாத 
படியால்நீ சுற்றங்களோடு இறுதிவரை பத்திரமாக 
இறுதிவரை இருக்கலாம்.என்று. 

நாம் போடும் ஆல்’ களுக்குப் பொருள் இருக்கிறதா என்ன
இப்பொழுது எல்லாம் தலைகீழ்.

உன் பிறந்த நாளில் உனை வணங்குகிறேன். உடன் 
ணங்கவும்  ஆளின்றி!



Saturday, June 18, 2016

என்ட குருவாயூரப்பன்…..

குருவாயூருக்குப் பல முறை செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும், திருப்தியாக, மனதில் நிற்கும்படியாக, குருவாயூரப்பனின் தரிசனம் கிட்டியதே இல்லை.  முதல் காரணம், எனக்கு சற்று  நிதானமாக, சில வினாடிகளாவது, நல்ல வெளிச்சத்தில்  பார்த்தால்தான், எதுவுமே தெரியும்.  இரண்டாவது மூர்த்தி சிறியதாக, ஏகப்பட்ட மலர் அலங்காரங்களுடன் இருப்பதால், ஒரு தோராயமாக ஒரு உருவம்  இருப்பது தெரியுமே தவிர, முகம் தெளிவாகத் தெரிந்ததே இல்லை.

கோயிலில், கொஞ்சம் ரேம்ப் மாதிரி உயரத்திலிருந்து சரிவாக செல்வது போல, தரிசன வழி அமைத்திருந்தாலும் பரவாயில்லை; பார்த்துக் கொண்டே செல்லலாம். ஆனால், அருகில் போனால்தான் மூர்த்தியே தெரிகிறது. நமக்குக் கிடைக்கும் சில மில்லி செகன்ட் நேரத்தில் எப்படி நிதானமாகப் பார்ப்பது? அதற்குள், சேவகர்கள் இழுத்துவிட்டு விட்டுவிடுவார்கள். 

மற்றவர்கள் யாவரும் ‘ஆஹா... நல்ல தரிசனம்!’ என வியந்து, ‘நீங்கள் பார்த்தீர்களா?’ என்று என்னை வினவும்  பொழுது, ஒரு மாதிரியாக இளித்துவைத்து, ‘ம்ம்ம்ம்ம் பார்த்தேன்.. பார்த்தேன்..’ எனச் சொல்லிவைப்பேன். “எனக்கு முன்னால்  நிற்கும் நம்பூதிரிதான்   தெளிவாகத் தெரிந்தார்” என்றா சொல்ல முடியும்?  ‘ஓஹோ... பார்க்கவில்லையா? உங்களுக்குக் கொடுப்பினை இல்லைபோலும்’  என்ற பதில் வசனத்தை அடுத்தவரிடமிருந்து  கேட்க விரும்பாததால், சமாளித்துவைப்பேன்.

16/06/16 அன்று, எனது நண்பர் ‘குருவாயூருக்குச் செல்லலாமா’ என வினவியபோது,   ‘எப்படியும் சாமி தெரியப்போவதில்லை... போய் என்ன செய்ய..’ என நினைத்தாலும், ‘அதற்கென்ன போகலாமே..!’  எனச் சொல்லிவைத்தேன்.  

அப்போது, மாலை மணி நான்கு.

கோவையிலிருந்து, கேரள எல்லை வாலையாரைத் தொட்டதுமே, பிடித்தது மழை. மழையென்றால், நம் ஊரில் பெய்வதுபோல, பிசுபிசு மழையெல்லாம் இல்லை!  ‘அடியோதண்டம்’ என்று சொல்வார்களே அப்படி ஒரு மழை. வைப்பர் எத்தனை வேகமாகச் வழித்தாலும், சாலைதெரியாத அளவிற்கு!  கூகுளாண்டவர் மற்றும் ஜி.பி.எஸ் துணையால் பாலக்காடு, த்ரிஷூர் யாவற்றையும் தவிர்த்து குருவாயூரை அடைந்த பொழுது இரவு மணி எட்டு. கோயில் வாசலிலேயே, ஒரு சௌகரியமான ஒரு லாட்ஜ் கிடைக்க, அவசரக் குளியல் போட்டுவிட்டு, வேட்டி துண்டுடன் விரைந்தோடினோம்; ஒன்பது மணிக்கு நடை அடைக்கப்படும் என்பதால், தரிசனம் கிடைக்குமோ என்று சந்தேகத்தோடு.

பழைய நினைவில், ஏதோ ஒரு நடைவழியாக கோயிலின் உள்ளே  நுழைந்து வைக்க, ‘இப்படியெல்லாம் உள்ளே வந்தால், சாமி பார்க்கலாகாது, வெளியே போய் க்யூவில் வா..’ என விரட்டப்பட்டு, வெளியே வந்தால், வரிசைவரிசையாக, நீள நீள க்ரில் அடைப்புகளில் , மக்களை நிற்க வைத்து, ஒவ்வொரு வரிசையாக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர்.  நாங்களும் ஒரு வரிசையில் போய் நின்று கொண்டோம். 

‘ஒன்பது மணிக்குள் பார்க்க முடியுமா.. இன்னும் அரைமணி நேரம்தானே இருக்கிறது, இவ்வளவு கூட்டம்..’ என்று முணக, பக்கத்தில் இருந்த ஒரு நம்பூதிரி, ‘சார்.. குருவாயூருக்குப் புதுசோ..? இன்னைக்கு கூட்டமே இல்லியாக்கும்’ என்றார்.

‘கூட்டம் இல்லையா?’ இவ்வளவு ஜனம் இருக்கு.. இதைப்போய் கூட்டமே இல்லை என்கிறாரே. . அப்ப மற்ற தினங்களில் எப்படி இருக்குமோ ?

‘ஆமாம் சாரே! இன்னிக்கு கூட்டம் ரொம்ம கொரச்சு .. பாருங்க.., இன்னும் 15 நிமிஷத்திலே தரிசனம் ஆயிடும்’ என்றார்.  சற்றே, அவநம்பிக்கையுடன் காத்திருந்தபோது, சரசர வென கூட்டம் கரைந்து கொண்டிருந்தது.  

அவர் சொன்னபடியே, 15ஆவது  நிமிடத்தில்  சன்னிதானம் முன் நின்றோம்.  கிருஷ்ணனுக்கு பூ அலங்காரங்கள் எதுவும் இல்லை. முகம் மிகத் தெளிவாகத் தெரிந்தது.  ஸ்வாமி சந்தனக் காப்பில் இருந்தார். மிக நன்றாக, ஏன்... கொஞ்சம் நிதானமாகக்கூட  தரிசனம் செய்ய முடிந்தது.  

தரிசனம் முடிந்ததும், அருகில் நின்ற அந்த நம்பூதிரி,  “வெளியே போக வேண்டா.. ராத்திரி ஒன்பது மணிக்கு ‘ஓலைவாயனா’, ‘திருப்புகா’ உண்டு.. சேவிச்சுட்டு போலாம்; சுவாமி     நம்மளையெல்லம் பார்க்க வேண்டி, பிரகாரத்தில் மூன்று தடவை வலம் வருவார்” என்றார்.

அவர் சொன்ன இரண்டும், பாரம்பரியாமாக கோயிலில், க்ருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவைகள்.  

திருப்புகா என்பது, வெள்ளித்தட்டில் க்ருஷணனுக்கு
கருவரையில் செய்யப்படும் ஒரு ‘ஹாரத்திசேவை. 
ஓலைவாயனா என்பது, அன்றைய தின வரவு செலவு பற்றிய 
ஒரு அறிக்கையை கிருஷ்ணன் முன் வாசித்தல்.

“இப்படி ஒரு தினசரி நிகழ்வு இருப்பதே பலருக்குத் தெரியாது சாரே! பொறுத்திருந்து பாருங்கள். ப்ரமாதாய்  இருக்கும்.  நீங்க அதிஷ்டம் செஞ்ஜுண்டு

அவர் சொல்வது, ஓரளவிற்குப் புரிந்தாலும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது. ஆனால், ‘அவ்வளவு எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் இல்லை’ என்று மட்டும் விளங்கிற்று. கூடியிருந்த மலையாள பக்தர்கள் அனைவரும், பரவசத்துடன், ஸ்வாமி வெளியே வரும்  அந்தக் கணத்திற்காக காத்திருந்தனர்.

மழைத் தூறல் வேறு. அப்போது மூன்று யாணைகள் சரசரவென, கோயிலின் உள்ளே நுழைந்தன. தங்க நிறத்தில் நெற்றிப் பட்டங்கள் ஜொலிக்க, அலங்கரிக்கப் பட்ட மூன்று யாணைகள், கம்பீரமாக வரிசையில் அணிவகுத்து நின்றன. 

மணி ஒன்பது.  கருவரையிலிருந்து உற்சவ மூர்த்தி  வெளியே வந்தார்.  “ராம..ராம..   க்ருஷ்ண..க்ருஷ்ண” என்ற கோஷம் இயல்பாக, கூட்டத்திடமிருந்து வந்தது.

ஒரு யாணை, குணிந்து மண்டியிட்டு, ஸ்வாமியை தன் தலையில் ஏற்றிக் கொண்டது.  பக்தர்களைக் காண குருவாயூரப்பனே, வெளிப் பிரகாரத்தில், மூன்று முறை யாணைமீது அமர்ந்து வலம் வருகிறார். இந்த பிரகார வலத்தில்,  யாணையில் முன்னால், அந்தக் கோயிலுக்குண்டான மங்கள வாத்தியக் கோஷ்டியினரும், நாதஸ்வரக் கலைஞர்களும், கேரள மேளம் இசைத்துக் கொண்டே செல்கிறார்கள். அடாடா.. சிறியதான அழகான விக்ரஹம்; அழகோ அழகு.

மூன்றாவது சுற்று முடிந்ததும்,  தங்க ‘கிருஷ்ணன்’ சிலை பொருத்தப்பட்ட , பதாகை போன்ற ஒன்றும் யாணைமீது ஏற்றப்பட்டு, மற்ற இரு யாணைகளும் அணிவகுப்பில் சேர, முறையான சோடசோபராங்களுடன் மூன்றுமுறை வலம் வருகிறார்.

ஹாரத்திக்குப் பின், க்ருஷ்ணன் கருவரைக்குச் செல்கிறார். நடை சாத்தப் படுகிறது.


இங்கே ஒரு பள்ளி கொண்ட பெருமாள் சிலை ஒன்று இருக்கிறது. சீதேவில் மடியில் தலை வைத்துக் கொண்டு, பூதேவியில் மேல் கால்களைப் போட்டுக் கொண்டு, சகல மூர்த்திகளும் பின்னால் நிற்க, அற்புதம்!


அனுபவித்துப் பார்த்த தினம்.








படங்கள் உதவி: கூகுள் 

Saturday, June 11, 2016

அமெரிக்காவை நோக்கி.......

மோடிக்கு எத்தனை தடவை எழுந்து நின்று கைதட்டினார்கள், அவர் மானிட்டரைப் பார்த்துப் படித்தாரா இல்லையா என்ற விஷயங்களைத் தவிர்த்து, மோடியின் உரையைக் கவனிக்கும் பொழுது, சில விஷயங்கள் ஊர்ஜிதமாகிறது.

1. India is clearly and visibly disowned its independent foreign policies of Pre-Cold war period. No more ‘Non-aligned’ nations. ‘அணி சேரா’ என்ற கோஷங்கள் யாவும் பரணையில் ஏற்றப் பட்டுவிட்டன.

2. அணுசக்தி மற்றும் ஆயுத வியாபாரத்தின் Strategic பார்ட்னராக இந்தியா உருவெடுத்து விட்டது.

3. பாதுகாப்புத் துறையில், அமெரிக்க டிசைன் Strategy ல் இந்தியா தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும்.

4. எரிபொருள் நிரப்பிக்கொள்ளுதல், பாதுகாப்பு தகவல்களை பரிபாறிக் கொள்ளுதல், ராணுவ சம்பந்தமான உபரி பாகங்கள், பாதுகாப்பு தகவல் பரிமாற்றம் போன்றவற்றில் பரஸ்பர உதவிகள். (LOGISTIC EXCHANGE MEMORANDUM OF AGREEMENT)

5. ஆசிய பசிஃபிக் பிராந்தியத்தில், இந்தியாவும்-அமெரிக்காவும் ப்ரையாரிட்டி பார்ட்னராகுகிறார்கள். (இந்த அம்சம் சற்றே அச்சமூட்டுவதாக இருக்கிறது. பல ஆப்பரிக்க நாடுகள். கல்ஃப் நாடுகள், மற்றும் சீனா இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். சீனாவைக் கட்டுப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில், அமெரிக்கா இதை நம்மீது வலியுறுத்தியிருக்கலாம். விளைவுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்) அனால்யா, யாருக்கு மாற்றாக அல்லது யாருக்கு எதிராக நாம் அமெரிக்காவிற்கு ‘ப்ரையாரிட்டி பார்ட்னர் ‘ என்பதை மத்திய அரசு தெளிவாக்க வேண்டும்.

6. இந்தியா முக்கியமான டிஃபன்ஸ் பார்ட்னர் என, இந்தோ-அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது. இது மிகப்பெரிய கொள்கை மாற்றம். இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப் படவேண்டும். இது இந்தியாவிற்கு பாதகமா அல்லது சாதகமா, இந்த ஒப்பந்தத்தின் மூலம், எந்தெந்த வகையில், நாம் அமரிக்காவிற்கு கடமைப்பட்டவர்களாகிறோம் என்பது தெளிவாக்கப் படவேண்டும்.

7. பாதுகாப்பான AP1000 ரியாக்டர்களை, இந்தியா வாங்கவிருக்கிறது. பாதுகாப்பு மிக்கதாயினும், ஒரே இடத்தில் (ஆந்திரா) ஆறு அணு உலைகளை நிர்மாணிப்பது எந்த அளவிற்கு புத்திசாலித்தனமானது என்பது தெளிவு படுத்தப் படவேண்டிய விஷயம். இதன் விலை கட்டுப்படியாகக் கூடியதுதானா என்பதும் விவாதிக்கப் படவேண்டும்.

மொத்தத்தில், மன்மோகன் காலத்தில் ஆரம்பித்த ‘அமெரிக்காவின் பக்கம் நகர்ந்து செல்வது’ என்ற கொள்கை, இப்போது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது போலத் தெரிகிறது. ஆனால், நாம் அவ்விதம் செய்யவில்லையென்றால், அந்த இடத்தை நமது எதிரி நாடுகள் நிரப்பிக் கொள்ளும். அது நமது பாதுகாப்பிற்கு மேலும் ஆபத்தை உருவாக்கும்.

அமெரிக்காவுடன் சல்லாபித்துக்கொண்டு, சீனாவுடனும் நல்லுறவு என்பது கத்திமேல் நடக்கும் சமாச்சாரம். பிஜேபி அரசு, சீனாவை எவ்வளவு எச்சரிக்கையுடன் கையாள்கிறது என்பது இனிமேல்தான் தெரியும். ஆனால், இதுவரை ‘சீனா’ மோடியின் அமெரிக்க விஜயத்திற்கு எதிராக, பெரிய அளவில் ஏதும் சொல்லவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். (சீனா தொலைக்காட்சி, மோடியின் அமெரிக்க விஜயத்தை லைவ்-டெலிகாஸ்ட் செய்த்து).



சர்வதேச அரசியல் நிபுனர்களும், பாதுகாப்பு டிப்ளமேட்களும் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.

Thursday, June 9, 2016

சொன்னா கேட்டிருக்கணும்...

“சுளை’’ ஒன்று ஐந்து ரூபாய் என அடாவடியாய் விற்றால்தான் என்ன குடிமுழுகிப் போச்சு? ஐந்து சுளை.. அட, பத்து சுளை சாப்பிட முடியுமா? ஆர்பாட்டமில்லாமல், கேட்ட விலையைக் கொடுத்து, பிளாஸ்டிக் கவரில், பலாச்சுளைகளை வாங்கிவந்து தின்றுவிட்டால் கதை முடிந்திருக்கும் தானே? என்ன....? தெருப்புழுதி கொஞ்சம், புகை கொஞ்சம் படிந்திருக்கும். நன்கு, கழுவிச் சாப்பிட்டால் ஆயிற்று.  தெருவில் சுளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? ரொம்பவும் மூளையை உபயோகப்படுத்துவதாக நினைத்து, ஒரு சுமாரான சைசில் முழுப் பலாப்பழத்தை யார் வாங்கிவரச் சொன்னது?

வாங்கிவந்த பழத்தை(காயை), ‘மோப்ப நாய்’ முகர்ந்து பார்ப்பது போல மணிக்கொருதரம் மோந்து பார்த்தால் பழுத்துவிடுமா என்ன? “வெயிலில் வைத்தால் பழுக்கும்” என்று கேள்விப்பட்டது  நினைவுக்கு வர, மாடிக்கு எடுத்துப்போய், பேப்பர்களை கனமாகப் பரப்பி, பாலாவின் மேலேயும் பேப்பர்களால் மூடி வைத்துவிட்டு, அடுத்த நாள் காலைவரை, ஞாபகமாக  மறந்துவிட்டாயிற்று.

அடாடா.. நேற்று வச்ச மீன் குழம்பு வேண்டுமானால் நன்றாக இருக்கும்..  நேற்று வச்ச பலாப்பழம் எப்படி இருக்குமோ என்ற கவலையுடன், இரண்டிரண்டு படிகாளாகத்  தாவி, மாடிக்குப் போய்ப்  பார்த்தால், நல்ல வேளையாக, பெருச்சாளியோ பூனையோ பிராண்டி வைக்காமல், வைத்த மேனிக்கு பழுதில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தது பலா.  ஹனுமன், பாக்ஜலசந்தியை ஒரே தாவலாகத்தாண்டி, ‘கண்டேன் சீதையை’ என்பது போல, நானும் 'கண்டேன் பலாப்பழத்தை'. மகிழ்ச்சியில், சென்ட்ரல் ஸ்டேஷன் போர்ட்டர் போல, பாவித்து பலாவைத் தலையில் தூக்கிக் கொண்டு, ‘விரு விரு’ வென கீழே வந்தாயிற்று.

மீண்டும் மோப்ப நாய் வேலையைத் துவங்கினால், லேசாக பாலாச்சுளை வாசம் வந்தது. இதென்ன வாழைப்பழமா, சடாலென தோலை உரித்து, விழுங்கி வைக்க? பிறகுதான் நினைவுக்கு வந்தது பலாப்பழத்தை உரிக்க, ‘ஆயுதங்கள்’ வேண்டும் என்பது. தெருவில் சுளை விற்கும் ஆயாவி னுடையதைப் போன்ற உபகரணங்கள் என்னிடம் ஏதுமில்லை. இருப்பது ஒரு தேங்காய் உரிக்கும் அரிவாள் மற்றும் சில காய்கறி வெட்டும் கத்திகள் மட்டுமே!

பலாப்பழத்தை நிற்கவைத்து, அரிவாளால் ஒரே போடாக போட்டு, இரண்டாகப் பிளக்க முடியுமா? ம்ம்ம்ம். நினைக்கவே கொடூரமாகத் தோன்றவே, தாஜா செய்தே பிளப்பது எனத் தீர்மாணித்தேன்.

அரிவாட்கள் எல்லாம் ஒரே அரிவாட்கள் அல்ல... ஒவ்வொரு  வேலைக்கும் அதன் தன்மைக்கு  ஏற்றாற்போல தனித்தனி அரிவாட்கள் உள்ளன. என்னிடம் இருக்கும் அரிவாள் எந்தக் கணக்கிலும் சேராத ஒரு கருவி. அதிக பட்சமாக தேங்காயின் நாரை மட்டுமே உரிக்கும். சிலசமயம் சினம் கொண்டு இடதுகை கட்டைவிரலையும் உரிக்கும்.

சாக்பீஸால் பாலாவின் நடுவே கோடுபோட்டு, அதன் மேலாக அரிவாளால் கீறினால், ம்ம்ம்ம் ஒரு மில்லி மீட்டர் கூட உள்ளே நுழையவில்லை. அரிவாள் மொக்கையோ மொக்கை.

திருப்புளி, சுத்தியல், காய்கறி வெட்டும் சுத்தி, டெஸ்டர், கட்டிங் ப்ளையர் என வீட்டில் இருக்கும் அத்தனை ‘ஹைடெக்  உபகரணங்களைக்' கொண்டு, பழத்தின் உள்ளே நுழைந்தாயிற்று. அதற்குள் கீழே பரப்பியிருந்த அத்துனை பேப்பர்களும் சுருட்டிக் கொண்டுவிட்டன.  போகட்டும் போ.. இந்த மாசம் பழைய பேப்பர்காரனுக்குப்  போட்டு காசு வாங்கமுடியாது.. அவ்வளவுதானே?

உள்ளே நுழைந்தால் போதுமா? அதை இரண்டாகப் பிளக்க வேண்டுமே  'நரசிம்மன்' வெறும் கை விரல் நகங்களால் , ஹிரண்யகசிபுவின் குடலை உருவிப்போட்டாராமே?  அதுபற்றிய ரெஃப்ரன்ஸ் அல்லது மேனுவல் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

உட்கார்ந்து, படுத்து, தம்கட்டி இரண்டாகப் பிளக்க முயன்று, கஜினியே வெட்கப்படுவது போல, மீண்டும்  
மீண்டும் தோல்வியே கிட்டிற்று. வீட்டில் வேறு யாராவது இருந்திருந்தால், நீ கையைப்பிடி, நான் காலைப் பிடிக்கிறேன் என, பீமனைப்போல இரண்டாகக் கிழித்துப் போட்டிருக்கலாம். தனியன். யாரைக் கூப்பிடுவது. சரி.. கால்களால் ஒருபக்கம் பிடித்துக்கொண்டு, கைகளால் இழுத்தால் என்ன? சே...சே.. தின்னும் பண்டத்தில் காலை வைப்பதாவது? ஆனாலும் வேறு வழியில்லை. அதை அப்படியே வைத்துவிட்டு, இடுப்பு வரை நன்றாகக் குளித்துவிட்டு, மீண்டும் இரண்டாகப் பிளக்கும் முயற்சி... ம்ம்ம்ம்.. ஸ்டாலின் எவ்வளவுதான் முயன்றாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாதது போலத்தான் என் முயற்சியும்.

நேற்றைக்கு, மோடி அமெரிக்க பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது ‘ஸ்டேன்டிங் ஒவேஷன்’ பெற்றது நினைவுக்கு வர, எழுந்து நின்று கால்களால் பழத்தின் ஒருபகுதியை இறுகப் பற்றிக் கொண்டு கைளால் ஒரே இழுப்பு.. அப்பாடா, ஒரே அடியில் மூன்று துண்டு.. பலாப்பழம் இரண்டாகப் பிளந்து மூலைக்கொன்றாகவும்,  நான் ஒருபக்கமாகவும் விழுந்துவைத்தேன்.

‘என்ன சார் சப்தம்?..’ என்றார் டெனன்ட்.

‘ஒண்ணுமில்லையப்பா.. ஒட்டடை அடிக்கிறேன்’

உஃப்.... ஒருவழியாக ஜெயித்தாயிற்று.. இனி என்ன? அமைச்சரவை அமைக்க வேண்டியது தானே?

விஷயம் அவ்வளவு சுலுவில்லை என்பது விளங்கிற்று. சுளைகள் யாவும் பதுங்கிக் கொண்டிருந்தன. வீட்டில் இருக்கும் கத்திகள் யாவும், ஆபரேஷன் தியேட்டருக்கு வந்துவிட்டன.  எதை அறுக்க எந்த கத்தி என்பது தீர்மாணமாகவில்லை. எல்லாம் மொன்னை.

ஒரு டபரா நிறைய  நல்லெண்ணை எடுத்துக் கொண்டு, அடங்காத சண்டிப் பிள்ளையை வழிக்குக் கொண்டு வருவது போல, ஒவ்வொரு சுளையாக நோண்டி எடுத்து, கார்கில் யுத்தம் போல ஒருவழியாக முடிவுற்றது. அதற்குள் வேட்டி ஒருபக்கம். துண்டு ஒருபக்கம். கிட்சன் முழுவதும் ரணகளம். 

ஒரு சுளை சாப்பிட்டுப் பார்க்கலாமா? 

பொறு..பக்கி...பொறு.. வீட்டுக்காரம்மாவின் படத்திற்கு முன்னால் வைத்து எடுக்காமல், அப்படி என்ன அவசரம்?

செலவு? நாலு கிலோ தினசரி பேப்பர். 200 மில்லி எண்ணெய். ஆறு கத்திகள். ஒரு அரிவாள். ஏழெட்டு தட்டுகள் மற்றும் இரண்டு முறம் நிறைய தாள் மற்றும் தோல்.

இவ்வளவு பிரயத்தனத்திற்கு 50 சுளைதான் என்பது அற்பமாகப் பட்டது.

சமையலறையைப் பார்ப்பதற்கு எனக்கே அச்சமாக இருந்ததால், ஃபோன் செய்து, வேலைக்கார அம்மாவை வரவழைத்து, கத்தி கபடாக்களை க்ளீன் செய்து, சமையலறையை சுத்தம் செய்யச் சொன்னால், இந்த வேலைக்கு தனியாக 100 ரூபாய் கொடு என்றாள். இதில் நமக்கு ஆப்ஷன் என்ன இருக்கிறது? சரி.. தருகிறேன். சுத்தமாகச்  செய்.

மீண்டும் குளித்துவிட்டு,  மனைவி படத்திற்கு நைவேத்தியம் வைத்துவிட்டு,  ஒரு சுளையை எடுத்து வாயில் போட்டால்...  என்ன இது, ஒரு சுவையையும் காணோம்? வைக்கோலைத் தின்பது போலிருந்தது.  கலர் என்னவோ மஞ்சளாக இருக்கே! அடுத்தது... அடுத்தது... ம்ஹூம் எல்லாச் சுளைகளுமே சுவையற்று இருந்தன.  இதற்கு பேசாமல்  கீழே பரப்பிய ‘தமிழ் ஹிந்து’ நாளிதழையே மென்று தின்றிருக்கலாம். இரண்டிலயம் ஒரு சாரமும் இல்லை.  தேன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாமா? வேண்டாம். ‘சுகர்’ லெவல் ஏறிவிட்டால் இன்னும் சிக்கல்.

சே.. இதென்ன இப்படி ஆன்டிக்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே? இப்ப என்ன செய்வது? எல்லாப் பிரயத்தனமும் வேஸ்டாகி விட்டதே?

எல்லாச் சுளைகளையும் கீறி, கொட்டைகளை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டு, மீதி ‘எல்லாவற்றையும்’ ஒரே கட்டாக அரிசிச் சாக்கில் கட்டி,  குப்பைத் தொட்டியில் வீச வேண்டியது தான்.

‘எங்கே சார் வெளியே கிளம்பிட்டீங்க...?’ என்றார், டெனன்ட்.

“ஹி..ஹி.. ஒட்டடை அடித்தேனா? கொஞ்சம்  அதிகமா குப்பை சேந்துட்டுது.. கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வரலாம் என கிளம்புகிறேன்”

எங்கள் நகரில் குப்பை கொட்ட இடம் இல்லை. குப்பை வண்டி வரும்போதோ அல்லது நாமாகவோதான் டிஸ்போஸ் செய்யனும்.

‘ஏன் சார்.. குப்பை வண்டிவருமே?’

“உள்ளே டெலிபோன் பெல் அடிக்கறாப்ல இல்லை...?”

“அப்படியா.. என் காதுல விழலியே....  தோ போய்ப் பாக்கறேன்.”


ஒருகிலோ மீட்டர் தள்ளிப் போய், முனிசிபல் குப்பைத் தொட்டியில், சாக்கைப் போட்டு விட்டு, திரும்பி வரும்பொழுது, மறக்காமல் இருபது ரூபாய்க்கு பலாச்சுளை வாங்கிவந்துவிட்டேன்.