Wednesday, January 11, 2012

நான்கு மனைவிகள்


சிறார்களுக்கு (17)
(பெரியவர்களுக்கும் கூட)

பணக்கார வியாபாரி ஒருவருக்கு,  நான்கு மனைவிகள். 

அதில் நான்காவது மனைவியை மிகவும் நேசித்தான். அவளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிவித்து அழகு பார்த்தான். எல்லாவற்றில்லும் சிறந்ததை அவளுக்குத்தான் வழங்குவான்.

மூன்றாவது மனைவி மிகவும் வனப்புள்ளவள். தனது  நன்பர்களிடம், தனது இந்த அழகான மனைவி பற்றி, பீற்றிக் கொள்வான். ஆனாலும், எங்கே அவள் தன்னைவிட்டு ஓடிவிடுவாளோ என அச்சப் பட்டுக்கொண்டே இருப்பான்.

இரண்டாவது மனைவி மிகவும் நம்பிக்கையானவள். புத்திசாலியும் கூட. இவனுக்கு பிரச்சினை வரும்போதெல்லாம், தீர்வுக்கு இவளைத்தான் நாடுவான்.


முதல் மனைவி, இவனுக்கு பூரண விசுவாசி. வீட்டை பராமரிப்பதிலும், குடும்பத்திற்காக உழைப்பதிலுமே இவளது நேரம் கழியும். ஆனால், இவளைக் கண்டால் வியாபாரிக்கு பிடிக்கவே பிடிக்காது.  இவளைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ள மாட்டான்.


ஒரு நாள் வியாபாரி, நோயில் விழுந்தான். மரணம் நெருங்குவது தெரிந்துவிட்டது. தனியாக சாவதற்கு அச்சப்பட்டான். நான்காவது மனைவியைக் கூப்பிட்டு, “அன்பே,  நான் இறந்துவிடுவேன். வாழும்போது, உன்னை எவ்வளவு சிறப்பாக கவனித்துக் கொண்டேன்? நான் இறக்கும் போது என்னுடன் இறக்கத் தயாரா? என வினவினான். ஒரே வரியில் பதில் கிடைத்த்து. ‘முடியவே முடியாது! இந்தபதில், அவனுள் கத்திபோல இறங்கியது.


மூன்றாவது அழகு மனைவியை கேட்டான்.  ‘முடியாது! நீ செத்தால், நான் வேறு ஒருவனை மணந்து கொள்வேன். வாழ்க்கையை அனுபவிப்பதை விட்டு, உன்னோடு சாக முடியாது என்றாள். விதிர்ந்து போனான் வியாபாரி.


இரண்டாவது மனைவியிடம், ‘நீ எப்போதும் எனக்கு உதவியிருக் கிறாய். இப்போதும் அவ்விதம் உதவ முடியுமா? என்னோடு இறக்கத்தயாரா? என்றான். ‘இந்த முறை அவ்விதம் உதவ முடியாது! வேண்டுமானல் சுடுகாடு வரை வருகிறேன்; அவ்வளவுதான்என்றாள். இந்த பதில் இடி போல தாக்கியது அவனை.


அப்போது ஒரு குரல் “நான் உன்னைவிட்டு, என்றும்  அகல மாட்டேன். நீ எங்கு சென்றாலும் வருவேன் என்றது. நிமிர்ந்து பார்த்தான், எலும்பும் தோலுமாய், வற்றலாக நின்று கொண்டிருந்தாள், முதல் மனைவி! இவ்வளவு அன்பான மனைவியை, உடல் நன்றாக இருக்கும் போது,  மிக நன்றாக கவணித்துக் கொள்ளாமல், வெறுத்துக் கிடந்தேனே? என மிகவும் வருத்தமுற்றான் வியாபாரி.

உண்மையில்,  நாம் அனைவருக்குமே நான்கு மனைவிகள் உள்ளனர். நாம் விவரித்த நான்காவது மனைவி, நமது ‘உடல்’.  என்னதான் அலங்கரித்து வைத்தாலும், இறந்தபின் நம்மைவிட்டு விலகிவிடும். உபயோகப்படாது!


மூன்றாவது மனைவி? அதுதான் நமது செல்வம். இறந்தபின் வேறு ஒருவரை நாடிச் சென்றுவிடும்.


இரண்டாவது மனைவி, நமது சுற்றமும் நட்பும். எவ்வளவுதான் நமக்கு உதவி யிருந்தாலும், சுடுகாடு வரைதான் வரமுடியும்.


முதல் மனைவிதான் நமது ஆன்மா!  வாழும்போது புலன் இன்பத்திலும், பொருளைத் தேடு வதிலும், உறவுகளைத்  நாடுவதிலும் நேரத்தை செலவிட்டு விட்டு, உதாசீனப்படுத்திய முதல் மனைவி.


============================================================================
 நீதி:  ஆன்மா மட்டுமே உடன் வருவது! அதுவேதான் நாம்.
       மற்றவை அல்ல! எனவே மரணம் வரை காத்திராமல், 
       இப்பொழுதே ஆன்ம வளர்ச்சிக்கு தேவையானதை செய்து 
       விடுவதே நல்லது.
============================================================================

1 comment:

  1. simply superb short story. It explained the great truth of life. Thank you Balaraman Sir for posting.

    ReplyDelete